திருப்பொன் ஊசல்

திருப்பொன் ஊசல்


சீர் ஆர் பவளம் கால், முத்தம் கயிறு, ஆக;
ஏர் ஆரும் பொன் பலகை ஏறி, இனிது அமர்ந்து;
நாராயணன் அறியா நாள் மலர்த் தாள், நாய் அடியேற்கு
ஊர் ஆகத் தந்தருளும் உத்தரகோசமங்கை
ஆரா அமுதின் அருள் தாள் இணை பாடி,
போர் ஆர் வேல் கண் மடவீர்! பொன் ஊசல் ஆடாமோ.


மூன்று, அங்கு, இலங்கு நயனத்தன், மூவாத
வான் தங்கு தேவர்களும், காணா மலர் அடிகள்,
தேன் தங்கி, தித்தித்து, அமுது ஊறி, தான் தெளிந்து, அங்கு,
ஊன் தங்கிநின்று, உருக்கும் உத்தரகோசமங்கைக்
கோன் தங்கு இடைமருது பாடி, குல மஞ்ஞை
போன்று, அங்கு, அன நடையீர்! பொன் ஊசல் ஆடாமோ.


முன், ஈறும், ஆதியும் இல்லான்; முனிவர் குழாம்,
பல் நூறு கோடி இமையோர்கள், தாம் நிற்ப,
தன் நீறு எனக்கு அருளி, தன் கருணை வெள்ளத்து
மன் ஊற, மன்னும் மணி உத்தரகோசமங்கை
மின் ஏறும் மாட வியல் மாளிகை பாடி,
பொன் ஏறு பூண் முலையீர்! பொன் ஊசல் ஆடாமோ.


நஞ்சு அமர் கண்டத்தன்; அண்டத்தவர் நாதன்;
மஞ்சு தோய் மாட, மணி உத்தரகோசமங்கை
அம் சொலாள் தன்னோடும் கூடி, அடியவர்கள்
நெஞ்சுளே நின்று, அமுதம் ஊறி, கருணை செய்து,
துஞ்சல், பிறப்பு அறுப்பான்; தூய புகழ் பாடி,
புஞ்சம் ஆர் வெள் வளையீர்! பொன் ஊசல் ஆடாமோ.


ஆணோ, அலியோ, அரிவையோ, என்று இருவர்
காணாக் கடவுள்; கருணையினால், தேவர் குழாம்
நாணாமே உய்ய, ஆட்கொண்டருளி, நஞ்சு தனை
ஊண் ஆக உண்டருளும் உத்தரகோசமங்கைக்
கோண் ஆர் பிறைச் சென்னிக் கூத்தன்; குணம் பரவி,
பூண் ஆர் வன முலையீர்! பொன் ஊசல் ஆடாமோ.


மாது ஆடு பாகத்தன்; உத்தரகோசமங்கைத்
தாது ஆடு கொன்றைச் சடையான்; அடியாருள்
கோதாட்டி நாயேனை ஆட்கொண்டு, என் தொல் பிறவித்
தீது ஓடாவண்ணம் திகழ, பிறப்பு அறுப்பான்;
காது ஆடு குண்டலங்கள் பாடி, கசிந்து அன்பால்,
போது ஆடு பூண் முலையீர்! பொன் ஊசல் ஆடாமோ.


உன்னற்கு அரிய திரு உத்தரகோசமங்கை
மன்னிப் பொலிந்து இருந்த, மா மறையோன் தன் புகழே
பன்னிப் பணிந்து இறைஞ்ச, பாவங்கள் பற்று அறுப்பான்;
அன்னத்தின் மேல் ஏறி ஆடும் அணி மயில் போல்
என் அத்தன்; என்னையும் ஆட்கொண்டான்; எழில் பாடி,
பொன் ஒத்த பூண் முலையீர்! பொன் ஊசல் ஆடாமோ.


கோல வரைக் குடுமி வந்து, குவலயத்துச்
சால அமுது உண்டு, தாழ் கடலின் மீது எழுந்து,
ஞாலம் மிக, பரி மேற்கொண்டு, நமை ஆண்டான்;
சீலம் திகழும் திரு உத்தரகோசமங்கை,
மாலுக்கு அரியானை வாய் ஆர நாம் பாடி,
பூலித்து, அகம் குழைந்து பொன் ஊசல் ஆடாமோ.


தெங்கு உலவு சோலைத் திரு உத்தரகோசமங்கை
தங்கு, உலவு சோதித் தனி உருவம் வந்தருளி,
எங்கள் பிறப்பு அறுத்திட்டு, எம் தரமும் ஆட்கொள்வான்:
பங்கு உலவு கோதையும், தானும், பணி கொண்ட
கொங்கு உலவு கொன்றைச் சடையான் குணம் பரவி,
பொங்கு உலவு பூண் முலையீர்! பொன் ஊசல் ஆடாமோ.

Comments

Popular posts from this blog

திருப்பொன் சுண்ணம்

அச்சப் பத்து

குழைத்த பத்து